டோரன்டோவை மீண்டும் ஸ்தம்பிக்க வைத்த தமிழர்கள் - 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கடந்த ஒரு வாரத்தில் தமிழர்களால் டோரன்டோ ஸ்தம்பித்தது இது இரண்டாவது முறையாகும்.
கனடா தமிழ் மாணவர் சமூகமும், கனடா தமிழர் சமூகமும் இணைந்து இப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நாடாளுமன்றம் முன்பாக உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில் இருந்து நேற்று புதன்கிழமை தொடங்கிய இப்பேரணி வெற்றிகரமாக நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கக் கொடி, அமெரிக்க, கனடா நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியபடி லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
குயின்ஸ் பார்க் மைதானத்தில் விடுதலைப் புலிகள் இயக்கக் கொடி, கனடா நாட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து பேரணி தொடங்கியது.
டோரன்டோ டவுன்டவுன் பகுதியில் உள்ள பல்கலைக்கழக வீதியில், உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் நோக்கி பேரணி சென்றது.
எந்தவித அசம்பாவிதமோ, வன்முறையோ, அமளியோ இல்லாமல் மிக மிக அமைதியான முறையில் தமிழர்கள் அணிவகுத்துச் சென்றதை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
இசைக் கருவிகளைக் கொண்டும், வாயினாலும் முழங்கியபடி தமிழர்களின் பேரணி சென்றது.
இனப்படுகொலையை சித்தரிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் வழியெங்கும் தமிழர்கள் விநியோகித்தனர். மேலும் இனப்படுகொலையை சித்தரிக்கும் பதாகைகளையும் ஏந்திச் சென்றனர்.
தமிழினப் படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வான் வழியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார மற்றும் தூதரக தடை விதிக்கப்பட வேண்டும்,
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கனடா அரசு அங்கீகரிப்பதன் மூலமாக நிரந்த அமைதித் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முழங்கப்பட்டன.
பேரணியில் பல்வேறு வெளிநாட்டு மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும், பல நாட்டு மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
பேரணியின்போது சிங்களர்கள் சிலர் ஒரு வாகனத்தில் இலங்கை தேசிய கொடியோடு அங்கு வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.