மின்வெட்டு விலக்கு அறிவிப்பு: ஸ்டாலினுக்கு சிஐஐ நன்றி!
சென்னை: விரைவில் 100 சதவிகிதம் மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் என துணை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தமிழகப் பிரிவின் தலைவர் ரகுநாதன் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் பெரிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு இன்னமும் 20 முத்ல 30 சதவிகிதம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதை அடியோடு நீக்குவதாக தமிழக துணை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. வரவேற்கத் தக்க அறிவிப்பு இது. மாநில மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியும் இது குறித்து உறுதியளித்துள்ளார்.
கடந்த மாதம் குறைந்த அழுத்த மின்சாரம் பெறும் தொழிற்சாலைகளுக்கு முழுவதுமாக மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதிக அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் பெரிய தொழிற்சால்களுக்கு இப்போது மேலும் கூடுதல் மின்சாரம் தருவதாகவும், விரைவில் முழுமையாக மின்வெட்டே இல்லாத நிலையை ஏற்படுத்தப் போவதாகவும் முக ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையை தொழில் துறையில் ஏற்படுத்தியுள்ளது. வேற்று மாநில தொழில் முனைவோரும் இனி தமிழகம் நோக்கி வரும் வாய்ப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு சிஐஐ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications