பாஜகவில் மேலும் சிக்கல்-எம்பி ராஜினாமா
டெல்லி: மக்களவைத் தேர்தலில் உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவின் தோல்விக்குக் காரணமான முதல்வர் கந்தூரியை மாற்றக் கோரி அம் மாநில முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷியாரி தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு தேர்தல் பிரச்சாரத்தையும் வேட்பாளர் தேர்வையும் முன்னின்று நடத்திய மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் பொறுப்பேற்கவில்லை. அத்தோடு மக்களவை, மாநிலங்களவையி்ன் முக்கிய பதவிகளை இந்தத் தலைவர்களே கைப்பற்றிவிட்டனர்.
இதனால் இவர்களுக்கு எதிராக அக் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
மேலும பல்வேறு மாநிலங்களில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குக் காரணமான மாநில அளவிலான எந்தத் தலைவர் மீதும் பாஜக தலைமை நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தோல்விக்கு தாங்களே பொறுப்பேற்காத நிலையி்ல், மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்டோர் உள்ளனர்.
இந் நிலையில் தேசிய அளவில் பாஜகவில் ஏற்பட்டுள்ள சி்க்கல் மாநிலங்களுக்கும் பரவியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில் அம் மாநில முதல்வர் கந்தூரியை நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் கோஷியாரி தலைமையிலான கோஷ்டி போர்க் கொடி தூக்கியுள்ளது.
கோஷியாரியின் இந்தக் கோரிக்கையை அத்வானி ஏற்க மறுப்பதால், தனது ராஜ்யசபா எம்பி பதவியை இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இந் நிலையில் தோல்விக்கு தன்னையும் தனது பிரச்சாரத்தையும் சில தலைவர்கள் முக்கியக் காரணமாக சுட்டிக் காட்டியதால் வெறுத்துப் போயுள்ள நரேந்திர மோடி இந்த உட்கட்சிப் பிரச்சனைகளில் எதிலும் தலையிடாமல் முடிந்தவரை ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.