ஜாமீன் ரத்து - சரணடைய ராஜ் தாக்கரேவுக்கு கோர்ட் உத்தரவு
மும்பை: மும்பையில் கடந்த ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்து விட்டது மும்பை உயர்நீதிமன்றம். அவர் 29ம் தேதி ரயில்வே கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் அது உத்தரவிட்டுள்ளது.
2008ம் அக்டோபர் 19ம் தேதி ஆண்டு ரயில்வே வாரிய தேர்வை எழுதுவதற்காக வந்த வட இந்திய மாணவர்கள் மீது கல்யாண் ரயில் நிலையத்தில் ராஜ் தாக்கரே கட்சியினர் பெரும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து ராஜ் தாக்கரே மீது ரயில்வே போலீஸர் வழக்குப் பதிவு செய்தனர். அவர் கைதும் செய்யப்பட்டார். ஆனால் அதன் பின்னர் அவருக்கு கல்யாண் செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், இந்த முன்ஜாமீன் வழங்கப்பட்டது தொழில்நுட்ப ரீதியாக தவறு, செல்லாது என்று கோரியும், ராஜ் தாக்கரேவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியும், மகாராஷ்டிர அரசு சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா, தற்போதைய நிலையில், போலீஸ் காவலில் வைத்து ராஜ் தாக்கரேவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டார்.
இருப்பினும், கல்யாண் செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்குவதற்கு முன்பே ராஜ் தாக்கரேவை ரயில்வே போலீஸார் கைது செய்து விட்டதால், அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், அது செல்லாது என்று வாதிட்ட அரசு வக்கீலின் வாதத்தை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
முன்ஜாமீனை ரத்து செய்த உயர்நீதிமன்றம்,வருகிற 29ம் தேதி ரயில்வே கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications