சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 13 தமிழ்நாட்டவருக்கு உதவிய நெப்போலியன்
டெல்லி: போலி இடைத்தரகர்களால் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்டு, டெல்லியில் உணவின்றி வாடிய 13 தமிழர்களுக்கு மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் உதவிகரம் நீட்டி, அவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 13 தமிழர்கள் வேலைவாங்கி கொடுப்பதாக இடைத்தரகர்கள் சிலர் ஆசை வார்த்தை காட்டியதால் ஆயிரக் கணக்கில் பணத்தை செலவழித்து சிங்கப்பூர் சென்றனர்.
அங்கு சென்ற பின்னர் தான் அவர்கள் இடைத்தரகர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர். இந்நிலையில் விசா போன்ற சரியான ஆவணங்கள் சென்ற அவர்கள் சிங்கப்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிங்கப்பூர் சட்டப்படி அவர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தண்டனை காலம் முடிந்தநிலையில் அவர்கள் அனைவரும் விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று டெல்லி வந்த அவர்கள், கையில் சுத்தமாக காசு இல்லாத நிலையில் அடுத்து வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது, எப்படி ஊர் திரும்புவது என்பது தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.
பின்னர் அவர்கள் தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று, அங்கிருக்கும் எம்.பி.க்கள் யாரையாவது சந்தித்து உதவி கேட்கலாம் என முடிவு செய்தனர். தமிழ்நாடு இல்லத்துக்கு நடந்தே வந்த அவர்கள் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான நடிகர் நெப்போலியனை சந்தித்தனர்.
அவர்களது குறையை கேட்டறிந்த நெப்போலியன் அவர்களுக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்தார். பின்னர் அவர்கள் தஞ்சாவூர் திரும்புவதற்கு ரயில் டிக்கெட் வாங்கி கொடுத்தார். மேலும், ஒவ்வொருவருக்கும் செலவுக்கு ரூ. 200 கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தார். ரயில் நிலையம் செல்வதற்கு போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்தார்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டெல்லியில் ரயிலைத் தவற விட்டுத் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிக் கரம் நீட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த நிலையில் நெப்போலியனும் தமிழர்களுக்கு உதவிக் கரம் நீட்டி அசத்தியுள்ளார்.