மதுரையில் பயங்கரம் - பாமக பிரமுகரின் தம்பி உள்பட 2 பேர் வெட்டிக் கொலை
மதுரை: மதுரை அருகே பிரபல ரவுடியை அடையாளம் தெரியாத சிலர் வெட்டிக் கொன்றனர். இதற்குப் பழிவாங்கும் வகையில் ரவுடிக் கும்பல் தாக்கியதில் தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பலியானார்.
மதுரை அருகே உள்ள அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் பாமகவைச் சேர்ந்தவர். பாமகவில் மாநில செயலாளராக இருந்தவர்.
இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் அப்பகுதியில் உள்ளன. கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இவருடைய தம்பி இருளப்பன். இவர் இப்பகுதியில் ரவுடியாக செயல்பட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை என ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன.
நேற்று இரவு அவனியாபுரம் மெயின் ரோட்டில் இருளப்பன் வந்து கொண்டிருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென இருளப்பனை வழிமறித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் இருளப்பன் அங்கேயே இறந்தார்.
இதையடுத்து இருளப்பனின் ஆதரவாளர்கள் வெகுண்டெழுந்து தலித் மக்கள் வசிக்கும் பெரியார் நகருக்குள் புகுந்தனர்.
அங்கிருந்த முத்தாண்டி, அவரது தம்பி முத்துச்சாமி, முருகன் ஆகியோரை சரமாரியாக வெட்டியதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
அதேசமயம், இன்னொரு கும்பல், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளரான சிற்றரசு என்பவரின் டீக்கடையை அடித்து நொறுக்கியது. மேலும் அங்கிருந்த சிற்றரசு, அவரது மகன் விஜயதுரை ஆகியோரையும் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இதில் விஜயதுரை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவனியாபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
விஜயதுரை கொலை தொடர்பாக இளஞ்செழியன், அவரது இன்னொரு தம்பி மாரி, உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications