கச்சத்தீவு ஒப்பந்தத்தை தூக்கி எறிக-ராமதாஸ்
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
போர் முடிந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலும் நின்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது.
கடந்த 15 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 3 முறை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மீனவர்களை சுட்டுக் கொல்வதும், துன்புறுத்துவதும், சிறையில் அடைப்பதும் போன்ற வன்முறை வெறியாட்டம் தொடர்கிறது. அவர்களது படகுகளை நேற்று இலங்கை ராணுவம் போர் கப்பல்களால் மூழ்கடித்துள்ளது.
தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழக முதல்வர்களும் அவ்வவ்போது கடிதம் எழுதி வந்தனர். ஆனால், மீனவர்களுக்கு எதிரான கொடுமை இன்னும் தொடர்ந்து நடக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான இத்தகைய தாக்குதல் நிறுத்தப்பட வேண்டுமானால், கச்சத் தீவில் நமக்குள்ள உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும். கச்சத் தீவு தொடர்பாக 1974-ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதி பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை மத்திய அரசுக்கு தமிழக அரசும், முதல்வரும் எடுத்து சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை கூடுகிறது. அதில் தமிழக மீனவர்களின் உயிரைக் காக்கவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் கச்சத் தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களை காக்க தவறிவிட்டோம். இங்குள்ள தமிழர்களையாவது காப்பாற்ற வேண்டும். அதற்கான முனைப்போடு கச்சத் தீவு பிரச்னையில் செயல்பட திமுக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார் என அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications