ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு - ஜூலை 23க்கு பெங்களூர் கோர்ட் ஒத்திவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி கோர்ட்டில் ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த வழக்கு தனி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சமீபத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்தது.
எந்த அடிப்படையில் இந்த முடிவை தமிழக அரசு எடுத்தது என்பது குறித்த ஆவணங்களை எங்களுக்குத் தர வேண்டும்.
இதைக் கேட்டுப் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 321வது பிரிவின் கீழ், வழக்கை வாபஸ் பெறுவதை எனது கட்சிக்காரர் எதிர்க்கவில்லை. மாறாக, அதுதொடர்பான ஆவணங்களின் நகலை அவர் பெற உரிமை உண்டு.
வழக்கை வாபஸ் பெறுவது என்பது அரசுக்கும், கோர்ட்டுக்கும் இடையிலான பிரச்சினை என்றாலும் கூட இதுகுறித்து மறு ஆய்வு மனு ஒன்றை எனது கட்சிக்காரர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் ஆவண நகல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 23ம்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்குடன் இணைக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறுவது தொடர்பாக தனி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இதையடுத்து தன் மீதான வழக்கை வாபஸ் பெற அரசுத் தாக்கல் செய்த ஆவணங்களின் நகல்களைக் கோரி மே 25ம் தேதி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.