கோயம்பேட்டில் வி.சி. பிரமுகர் கொடூர கொலை
சென்னை: சென்னை கோயம்பேட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 35 வயதாகும் இவரது சொந்த ஊர் திட்டக்குடி அருகே உள்ள மருவத்தூர். அக்கிராம விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக கோயம்பேடு மார்க்கெட்டில், வேலை பார்த்து வந்தார். அடிக்கடி ஊர் போய் வருவது வழக்கம்.
அதேபோல 2 நாட்களுக்கு முன்பும் ஊர் சென்று திரும்பினார்.
ஊருக்குப் போய் விட்டு வந்த அவர் நேற்று இரவு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடை முன்பு படுத்துத் தூங்கினார். இந்த நிலையில் இன்று காலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார் கிருஷ்ணமூர்த்தி.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றினர்.
மார்க்கெட்டில் நடத்திய விசாரணையில், பெண் விவகாரம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்திக்கும், அவரது அண்ணன் தங்கராஜ் என்பவருக்கும் இடையே சண்டை இருந்து வந்தது தெரிய வந்தது.
அதாவது தங்கராஜுவின் மனைவியுடன், கிருஷ்ணமூர்த்தி கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம். இது தொடர்பாக ஊருக்குப் போயிருந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கும், தங்கராஜுக்கும் இடையே மோதல் மூண்டது. ஊரில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் ஊர் திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. அவருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளார் தங்கராஜு. மார்க்கெட்டுக்கு வந்து தூங்கியவரை கொடூரமாகக் கொன்று விட்டுத் தப்பியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
தலைமறைவாகி விட்ட தங்கராஜுவைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications