ஏர் பிரான்ஸ் விமான விபத்து - இதுவரை 50 உடல்கள் மீட்பு
ரியோ டி ஜெனிரோ: ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் நேற்று 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசில் இருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பஸ் ஏ 330 விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 228 பேரும் பலியாகி விட்டனர். விமானம் கடலில் 3 ஆயிரம் அடி ஆழத்தில் கிடக்கலாம் என கருதப்படுகிறது.
மீட்பு பணியில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாட்டு கப்பற்படை கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரான்ஸ் கப்பற்படையினர் பிரேசிலின் வடகிழக்கு கடலோர பகுதியில் 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். பிரேசில் கப்பற்படையினர் ஒரு உடல் கண்டெடுத்துள்ளனர்.
இதையடுத்து இதுவரை மொத்தம் 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரேசில் கப்பற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
மீட்கப்பட்ட உடல்களை ரிசிப் நகருக்கு கொண்டு சென்று அடையாளம் பார்க்கும் பணிகள் துவக்கப்படும். ஏற்கனவே மீட்கப்பட்ட உடல்களின் அடையாளங்கள் அறியப்பட்டு விட்டன.
இந்த விபத்தில் பலியான உறவினர்களின் உமிழ் நீர், முடி மற்றும் ரத்த மாதிரி ஆகியவற்றை பெற்று இருக்கிறோம். இதோடு ஒப்பிட்டு இறந்த உடல் யாருடையது என்பதை கண்டறிக்கிறோம்.
தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அனைத்து உடல்களும் கிடைக்கும் வரை இந்த தேடுதல் தொடரும். ஆனால், நாளுக்கு நாள் உடல்கள் கிடைக்கும் வாய்ப்பு குறைந்து வருகிறது என்றார் அவர்.
கிடைக்குமா கருப்பு பெட்டி...
இந்நிலையில் விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிபுணர் ஒருவர் கூறுகையில், அந்த விமானத்தின் கருப்பு பெட்டி வரும் ஜூன் 30ம் தேதி வரை சிக்னல்களை அனுப்பி வரும். அதற்குள் அதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் விபத்துக்கான காரணம் என்ன என்பதை இறுதி வரை அறிய முடியாமல் போய்விடும் என்றார்.