கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவு
திருவண்ணாமலை: அரசுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிலுவை தொகை வழங்காததால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில், தாமரை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பு, 1987-88 -ம் ஆண்டில் கட்டப்பட்டது. அதற்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், வருவாய்த் துறை மூலம் 20 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தியது.
ஆனால் அந்த நிலத்துக்கு மிகக்குறைவான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை நிலத்தின் உரிமையாளர்கள் ஏற்கவில்லை. தங்கள் நிலத்திற்கு உரிய விலை வேண்டி திருவண்ணாமலை நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிலத்திற்கு சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்க கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், அதை ஏற்க வீட்டு வசதி வாரியம் மறுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டும், சதுர அடிக்கு 12 ரூபாய் விலை வழங்குவதை உறுதி செய்தது. இதன் பின்பு , சுப்ரீம் கோர்ட்டில் வீட்டு வசதி வாரியம் மூலம் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம்
கோர்ட்டும் உறுதி செய்தது.
கோர்ட் தீர்ப்பு வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலத்தின் உரிமையாளர்ளுக்கு இதுவரை நிலுவை தொகை வழங்கப்படவில்லை.
இதனால், பாதிக்கப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த முகமது அலி, முகமது கவுஸ், ஆகியோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சாம்பசிவம், வீட்டு வசதி வாரியத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த வருவாய் துறையை சார்ந்த
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக தளவாட பொருட்களையும், ஆர்.டி.ஓ., அலுவலக
தளவாட பொருட்களையும், காரையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications