வருண் காந்தியின் துவேஷப் பேச்சு - 2 தடயவியல் ஆய்வு முடிவுகளால் குழப்பம்
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிலிபித்தில் பேசிய வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் துவேஷமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறை சென்ற அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஜாமீனில் விடுதலையானார். பின்னர் அவர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கும் தள்ளுபடியானது.
இந்த நிலையில் பிலிபித்தில் தான் பேசிய பேச்சு அடங்கிய சிடியில் இருப்பது தனது குரலே அல்ல, அதை திரித்து தயாரித்துள்ளனர் என்று கூறியிருந்தார் வருண் காந்தி. இதையடுத்து சிடியில் உள்ள பேச்சு வருண் காந்தியின் குரல்தானா என்பதை அறிய தடயவியல் சோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
லக்னோ மற்றும் சண்டிகரில் உள்ள தடயவியல் ஆய்வகங்களில் குரல் சோதனை நடந்தது.
இதில் இரு ஆய்வகங்களும் சிடியில் இருப்பது வருணின் குரல்தான் என்பதை உறுதி செய்துள்ளன. அதேசமயம், சண்டிகர் ஆய்வகம் தெரிவித்துள்ள ஆய்வு முடிவில், குரல் ஒன்றுதான். ஆனால் அதை தேவைக்கேற்ப ஆங்காங்கு ஒட்டி திரித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் லக்னோ ஆய்வகம், சிடியில் எந்தவித மோசடியும் நடக்கவில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
சண்டிகரில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் கூறுகையில், சிடியில் உள்ள குரல் வருண் காந்தியின் குரல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிடி திருத்தப்பட்டிருப்பதாக நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம்.
அதாவது வருணின் பேச்சை எடிட் செய்து, தேவைக்கேற்ற இடங்களில் சேர்த்து, ஒரே கோர்வையாக அவர் பேசியது போல செய்திருக்கிறார்கள் என்கின்றனர்.
ஆனால் லக்னோ தடயவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், குரல் வருண் குரல்தான். அதேபோல சிடியிலும் எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உ.பி. போலீஸார் லக்னோ ஆய்வகம் கொடுத்த முடிவை மட்டும் முக்கியமாக கருதுவதாக தெரிகிறது. இந்த முடிவின் அடிப்படையில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என விசாரணை அதிகாரி மணி ராம் ராவ்.
ஆனால் போலீஸாரின் இந்தக் கூற்றை ஏற்க முடியாது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மொத்த சிடியுமே மோசடியாக தயாரிக்கப்பட்டது. வார்த்தைகளை தங்களுக்கு இஷ்டப்பட்ட இடத்தில் சேர்த்து தயாரித்துள்ளனர். தடயவியல் முடிவு பாரபட்சமாக உள்ளது என்றார்.