திமுகவுடன் கூட்டணி இல்லை-பிரகாஷ் காரத்
டெல்லி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராய சிபிஎம் கட்சியின் 2 நாள் மத்திய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. நேற்று இக்கூட்டம் முடிவடைந்தது.
கூட்டத்திற்குப் பின்னர் பிரகாஷ் காரத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக, மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து கட்சி தலைவர்களிடையே பல்வேறு கருத்துகள் எழுந்தன. எனினும், ஏறத்தாழ ஒருமித்த ஆதரவு கிடைத்தது.
அதே நேரத்தில், முன்னதாகவே ஆதரவை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று சிலர் கூறினர். ஆதரவை வாபஸ் பெறுவதை தவிர வேறு வழி எதுவும் எங்களுக்கு இல்லை.
மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது சரியான மற்றும் அவசியமான முடிவு என்று மத்திய கமிட்டி உறுதி செய்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான இடதுசாரிகளின் நிலைப்பாட்டை அந்த முடிவு உறுதி செய்கிறது.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அல்லாத ஒரு மாற்று அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது, சரியான முடிவு. ஆனால், தேசிய அளவில் விரிவான மற்றும் நம்பகத்தன்மையுடன் கூடிய மாற்று அணியை உருவாக்க தவறி விட்டோம்.
மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் கட்சிக்குள் ஏற்பட்ட தவறான செயல்களால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. அது குறித்து பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இடதுசாரிகள் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து நல்லுறவை பேணி காப்போம். மூன்றாவது அணியை வலுப்படுத்த முயற்சிகள் தொடரும்.
திமுக உள்பட காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.
கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையிலும், மத்திய கமிட்டியின் முடிவுகளை அமல்படுத்தியவன் என்ற முறையிலும் தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கட்சியின் மத்திய கமிட்டியுடன் சேர்ந்து நானும் பொறுப்பேற்கிறேன் என்றார் காரத்.