பைதுல்லா தலைக்கு ரூ. 5 கோடி-பாக். அறிவிப்பு
இஸ்லாமாபாத்: தாலிபான் தலைவர் பைதுல்லா மசூதை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து தருபவர்களுக்கு ரூ. 5 கோடி பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
தாலிபான்களை ஒழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா படு தீவிரமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டப்பட்ட தாலிபான்கள் தற்போது ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அங்கிருந்து முற்றிலுமாக அழிக்க வேண்டும் என அமெரிக்க அரசு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதையடுத்து பாகிஸ்தான் கடந்த 6 மாத காலமாக வடமேற்கு எல்லைப்பகுதியில் தாலிபான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது பாகிஸ்தான் அரசு தனது குறியை மெல்ல தெற்கு வசிர்ஸ்தான் பகுதியை நோக்கி மாற்றியுள்ளது. அங்கு இருக்கும் தாலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மசூத்தை கைது செய்ய முயன்று வருகிறது.
இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மசூதை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுத்தால் அவர்களுக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு பத்திரிகைகளில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அரசு இவரின் தலைக்கு ரூ. 25 கோடி விலை நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.
இவனை தவிர தாலிபான் இயக்கத்தை சேர்ந்த இன்னும் சிலர் குறித்து தகவல் கொடுப்பதற்கும் பாகிஸ்தான் அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது.
பாடா பகுதியில் இருக்கும் பஜவுர் இயக்கத்தை சேர்ந்த மொல்வி பகிர் குறித்து துப்ப தருபவர்களுக்கு ரூ. 1.5 கோடியும், அவருடன் இயங்கி வரும் மற்ற ஐந்து பேர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 1 கோடியும் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், சில தீவிரவாதிகளை குறித்து துப்பு தந்தால் ரூ. 50 வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.