நெல்லை அருகே காதல் ஜோடி எஸ்கேப் - காதலன் வீடு சூறை
நெல்லை: காதல் ஜோடி ஊரை விட்டு ஓடியது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் காதலனின் வீட்டை அடித்து சூறையாடினர்.
நெல்லை அருகே உள்ள சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி மகன் கோட்டியப்பன். கட்டிட தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் மகள் லெட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி ஊரை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த லட்சுமியின் உறவினர்கள் கோட்டியப்பனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர். இதையடுத்து அவரது தாய், தந்தை, தங்கை வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பலவேசம், அவரது மனைவி பேச்சியம்மாள், மகன்கள் மாணிக்க கணேஷ், ராம சுப்பிரமணியன், உறவினர் ராமையா ஆகியோர் கோட்டியப்பன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த டிவி, கட்டில், பீரோ, மெத்தை, சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.. பின்னர் துணிகளுக்கு தீ வைத்தனர்.
வீடு முழுவதும் தீ பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பாளை தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கணேசன, ஏட்டு ஜெயபால் ஆகியோர் தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக சிவந்திபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜக்குபாய், விசாரணை நடத்தி பேச்சியம்மாள், மாணிக்க கணேஷ், ராமையா ஆகியோரை கைது செய்தனர். பலவேசம், ராமசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
தீ வைத்து கொளுத்தப்பட்ட கோட்டியப்பனின் வீடு போலீஸ் நிலையம் அருகில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.