காங் எம்.எல்.ஏ செல்வராஜ் மரணம்-சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டசபை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவான குயின்ஸ்லேண்ட் மற்றும் ஊர்வசி சோப் நிறுவனங்களின் அதிபர் செல்வராஜ்.
சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் தங்கியுள்ளார். நேற்று தி.நகரில் உள்ள தனது வீட்டில் இன்று நடைபெறவுள்ள முத்திரைத்தாள் பதிவுத்துறை, சுற்றுலா, செய்தி விளம்பரத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை குறித்து பேசுவதற்காக குறிப்புகள் தயார் செய்து கொண்டிருந்தார்.
இரவு 10 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் தி.நகர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
செல்வராஜுக்கு நளினி என்ற மனைவியும், அமிர்தராஜ், ஆனந்தராஜ் என்ற 2 மகன்களும், ராஜ பிரியா என்ற மகளும் உள்ளனர். அமிர்தராஜ், கிங்ஸ் கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஆனந்தராஜ் கல்லூரி படிப்பும், ராஜபிரியா 12-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
சென்னையிலேயே இன்று செல்வராஜின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
57 வயதாகும் செல்வராஜின் சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள மரந்தலை கிராமம். அவரது தந்தை பெயர் துரைசாமி நாடார். தாயார் ராஜம்மாள்.
செல்வராஜ் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி. தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக 2 முறை பொறுப்பு வகித்துள்ளார்.
சட்டசபை ஒத்திவைப்பு..
இந்த நிலையில்,இன்று காலை சட்டசபை கூடியதும் சபாநாயகர் ஆவுடையப்பன் இரங்கல் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
இரங்கல் தீர்மானத்தை அவர் வாசித்து முடித்ததும் அவை உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மெளனம் அனுஷ்டித்தனர். இதையடுத்து சபை நடவடிக்கைகள் இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
கருணாநிதி அஞ்சலி:
முன்னதாக முதல்வர் கருணாநிதி இன்று காலை செல்வராஜின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி, மகனுக்கு ஆறுதல் கூறினார்.
இதேபோல காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்களும் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.