நகராட்சிகளில் என் படம் கூடாது-மு.க.ஸ்டாலின்
சென்னை: ஓசூர் நகராட்சியில் தனது படத்தை வைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல, வேறு எந்த நகரமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவரக் கூடாது என்று துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓசூர் நகராட்சி மன்றக் கூட்டம், கடந்த ஜூன் 30ம் தேதி நடந்தது. அதில், ஓசூர் நகர்மன்றக் கூட்டரங்கில் துணை முதல்வரின் படத்தை வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, நகர்மன்ற துணைத்தலைவர் மாதேஸ்வரன் கொண்டு வந்தார். இதற்கு அதிமுக, பாமக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அத்தீர்மானம் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தத் தீர்மானமே தேவையற்றது, அவசியமற்றது என்பதே என் கருத்து. உள்ளாட்சி மன்றங்களில் படங்கள் வைப்பது குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும், விதிமுறைகளுக்கும் இந்தத் தீர்மானம் முரணானது ஆகும்.
ஊராட்சிகள், நகராட்சி அமைப்புகள் போன்ற உள்ளாட்சி மன்றங்கள் தத்தம் பகுதிகளில் வாழும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படை வசதிகளை பொது மக்களுக்கு எவ்விதக் குறைவுமின்றி போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி அளித்திட வேண்டும்.
வளர்ச்சி திட்டங்களின் பயன் உடனடியாகக் கிடைத்திட வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறையின் லட்சியமாகும்.
ஓசூர் நகர்மன்றத்தில் நிறைவேற்றியது போன்ற தீர்மானங்களை எந்த நகர மன்றத்திலும் கொண்டு வரக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
2 ஊராட்சித் தலைவர்கள் நீக்கம்:
இதற்கிடையே கிராமப் புற வளர்ச்சித் திட்டப் பணிகளில் போலி ஆவணம் தயாரித்தல், பணம் கையாடல் உள்ளிட்ட முறைகேடுகள் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருவரைப் பதவி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.
மேல்புவனகிரி ஒன்றியம் கிளாவடி நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார், நல்லூர் ஒன்றியம் இறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் க.ராமலிங்கம் ஆகியோர் இந்த முறைகேடுகளுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் நீதிமன்றக் காவலில் இருந்தோர், தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தவர், குற்ற வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்கச் சென்றோர் ஆகியோரது பெயர்களைத் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வருகைப் பதிவேட்டில் போலியாகச் சேர்த்து, ஊராட்சி மன்றத் தலைவர் எம்.குமார் முறைகேடு புரிந்துள்ளார்.
மற்றவர்களின் கையெழுத்தை போலியாக இட்டுள்ளதாலும், போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் செய்தது மட்டுமின்றி, பதவியைத் தவறாக பயன்படுத்தி அரசுத் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளார் குமார்.
இறையூர் ஊராட்சி நிதியில் செலவினச் சீட்டுகள், மதிப்பீடு, அளவுப் புத்தகம், மற்றும் எவ்வித ஆவணமும் இல்லாமல் பணம் எடுத்து இருக்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம்.
அவர் அரசாணைக்கு முரணாக தன்னிச்சையாகச் செயல்பட்டு மிகைச் செலவினம் செய்து, ஊராட்சிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஊராட்சி நிதியைத் தன் விருப்பம்போல் எடுத்து கையாடல் செய்து இருக்கிறார் ராமலிங்கம்.












Click it and Unblock the Notifications