இந்தியாவின் நிதியுதவிக்கு நன்றி: இலங்கை தூதர்
சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. 500 கோடியும், தமிழக அரசு ரூ. 25 கோடியும் தருவதாக உறுதியளித்துள்ளதை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம் என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் ரொமேஷ் ஜெயசிங்கே கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், ஐ.நா. அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் துணையை, தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக நாடவுள்ளோம்.
இலங்கையில் தற்போது நிலைமை முன்னேறி வருவதாலும், பாதுகாப்பு சற்று மேம்பட்டிருப்பதாலும், ஐ.நா. அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், பன்னாட்டு தொண்டு அமைப்புகளை உள்ளே அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அதிபர் ராஜபக்சே, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான தற்போதுள்ள உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றார்.
இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் பேசுகையில், தனி ஈழக் கோரிக்கை செத்து விட்டது. இதை முதல்வர் கருணாநிதியே சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியல் வாதிகள் எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தனி ஈழ ஆதரவு நிலையைக் கைவிட்டு விட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணவும், தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியிலும் அவர்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும் என்றார் ராம்.












Click it and Unblock the Notifications