மதுரையை பிரித்து நெல்லை போக்குவரத்து கோட்டம்
சென்னை: போக்குவரத்துக் கழகத்தின் மதுரை, சென்னை கோட்டங்களை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டதாகவும் விரைவில் நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய போக்குவரத்து கழக கோட்டம் அமைக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ அப்பாவு, நெல்லையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகக் கோட்டம் அமைக்கப்படுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு,
கடந்த காலத்தில் 23 போக்குவரத்து கழகங்கள் இருந்தன. பின்னர் அது 7 மண்டலங்களாக மாற்றப்பட்டன. தற்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் 20,013 பேருந்துகள் உள்ளன. இதில் மாநகரப் பேருந்துகள் 3,257, விரைவுப் பேருந்துகள் 1,041.
விழுப்புரம் கோட்டத்தில் 3,253, சேலத்தில் 2,026, கோவையில் 2,906, கும்பகோணத்தில் 3,432, மதுரையில் 4,098 பேருந்துகள் உள்ளன. இதில் 2,000 பேருந்துகளுக்கு மேல் உள்ள கோட்டங்களைப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக மதுரை, சென்னை கோட்டங்களை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டு இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அறிக்கை தர இன்னும் 2 மாதம் அவகாசம் கேட்டு இருக்கிறார்கள்.
அறிக்கை கிடைத்தவுடன் நெல்லையை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழக கோட்டம் அமைக்கப்படும்.
தற்போது 1,000 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. மேலும் 1000 புதிய பேருந்துகள் வரவுள்ளன. அதன் பிறகு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதிக அளவு புதிய பஸ்கள் விடப்படும் என்றார்.