திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளுக்கு தைரியம்-ஓ.பி
சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது. சட்டம்-ஒழுங்கு மிகச் சிற்பபாக இருந்தது. சட்டத்தின் ஆட்சி நடந்தது. வீரப்பனை சுட்டு வீழ்த்திய காவல்துறையினருக்கு அதிமுக ஆட்சியில் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு அடுத்த பதவி உயர்வை இந்த அரசு வழங்கவில்லை. இதுதான் நாட்டுக்காக பாடுபடும் காவல்துறையினருக்கு அந்த அரசு தரும் பரிசா?.
காவல்துறை நிரந்தரமானது. அதைக் கட்டுப்படும் ஆட்சியாளர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல என்று 1958ம் ஆண்டு இதே மன்றத்தில் அறிஞர் அண்ணா சொன்னார்.
நிரந்தரமான காவல்துறையை நிரந்தரமில்லாத இந்த அரசு ஆட்டிப்படைக்கிறது. காவல்துறைக்கு காக்கிச் சட்டை இருக்கிறது. ஆனால், கம்பீரம் இல்லை. அவர்களிடம் ஆயுதம் உள்ளது. ஆனால், துணிச்சல் இல்லை. அதிகாரம் உள்ளது, உரிமை இல்லை.
காவல்துறையிடம் வேகம் இல்லை. இதனால் குண்டர்களை ஒடுக்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளுக்கு தவறு செய்யும் தைரியம் வந்துவிடுகிறது.
விமானக் கடத்தல், பஸ் கடத்தல், கப்பல் கடத்தல் எல்லாம் கேள்விக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாட்டிலேயே முதல் முறையாக ரயில் கடத்தப்பட்டது திமுக ஆட்சியி்ல் தான். அதில் தொடர்புடைய குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடப்பதால் சில வழக்குகளி் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மண்டை ஓடு கிடைத்ததாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
மது விற்பனையில் பெரும் ஊழல் நடக்கிறது. நள்ளிரவுக்குப் பின்னும் விடிய விடிய மது விற்பனை நடக்கிறது. மது மூலம் ரூ. 10,000 வருமானம் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், முறையாக வருமானம் கிடைத்திருந்தால் ரூ. 15,000 கோடியாகியிருக்க முடியும்.
கட்டப் பஞ்சாயத்துகள் அதிகமாகிவிட்டன. ஆளும் கட்சியினரே நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு அமைச்சரே கூட இதில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. மணல் கொள்ளையிலும் ஆளும் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.
வீதிக்கு வீதி வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. தமிழகமே போராட்டக் களமாகவும் மாறிவிட்டது. பல்வேறு துறையினரும் போராடி வருகின்றனர். அவர்களை அழைத்துப் பேச்சு நடத்த வேண்டிய அரசு அவர்களை மிரட்டுகிறது.
ஆனால், இடைத் தேர்தல் வருவதால் பயிற்சி டாக்டர்களின் உதவித் தொகையை உயர்த்தியுள்ளனர்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இன்னும் நக்ஸலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது. வருச நாடு, முருகமலை போன்ற இடங்களில் அவர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதாக அப் பகுதி மக்களே கூறுகின்றனர்.
தேர்தல்களில் ஆளும் கட்சியினர் முறைகேடு, தில்லுமுல்லு, வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டது. ஜனநாயகம் சிதைக்கப்பட்டுவிட்டது என்றார் பன்னீர்.
இந்த விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இவரையும் 9 எம்எல்ஏக்களையும் இன்று குன்னூரில் நடக்கும் அதிமுக செயற்குழுக் கூட்டத்துக்கு வர வேண்டாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.