குடியிருப்பில் பெண் போலீஸை தாக்கிய எஸ்.ஐ
சண்டிகர்: பஞ்சாப் காவல்துறை குடியிருப்புக்குள் புகுந்து பெண் போலீஸ்காரரை பட்டப் பகலில், நூற்றுக்கணக்கானோர் கண் முன்பாக வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினார் சப் இன்ஸ்பெக்டர்.
சண்டிகர் 9வது செக்டார் பகுதியில் பஞ்சாப் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு 39 வயதாகும் குர்தர்ஷன் கெளர் என்ற கான்ஸ்டபிள் வசித்து வருகிறார்.
நேற்று இங்கு சப் இன்ஸ்பெக்டர் சர்ஜீவன் சிங் என்பவர் வந்தார். குர்தர்ஷன் கெளரை வீட்டை விட்டு தரதரவென வெளியே இழுத்து வந்தார். இதைப் பார்த்ததும் அங்கு கூட்டம் கூடி விட்டது.
வெளியில் இழுத்து வந்த குர்தர்ஷன் கெளரை சரமாரியாக தாக்கத் தொடங்கினார் சர்ஜீவன் சிங். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போயினர். பின்னர் அவர்களில் சிலர் உள்ளே புகுந்து சிங்கைத் தடுத்து கெளரை மீட்டனர்.
தகவல் அறிந்து உயர் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அநாகரீகமாகவும், மிருகத்தனமாகவும் நடந்து கொண்ட சர்ஜீவன் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குர்தர்ஷன் கெளர் இன்டலிஜென்ஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதே பிரிவில் 7 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார் சிங்.
இச்சம்பவம் குறித்து கெளர் கூறுகையில், எனது தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து சுவரில் மோத வைத்தார் சர்ஜீவன் சிங். மேலும், எனது வயிற்றிலும் காலால் எட்டி உதைத்தார்.
செக்டார்-3 காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக வந்து என்னை மருத்துவமனையில் சேர்க்க முயற்சிக்கவில்லை.
ஏற்கனவே இந்த எஸ்.ஐ. குறித்து நான் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளேன் என்றார்.