'ரா' மீது குற்றச்சாட்டு-எந்த ஆதாரமும் தராத பாக்.
டெல்லி: இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல், பலுசிஸ்தான் தீவிரவாதம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் ரா உளவு அமைப்புக்கு தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் எதையும் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இது பாகிஸ்தான் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் அவதூறான, திசை திருப்பும் வகையிலான தவறான தகவல்கள் ஆகும் என்றும் மத்திய அரசுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் நடந்த அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் பிரதமர் கிலானி, ரா அமைப்பின் தொடர்புகளை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணப் பட்டியலை வழங்கியதாக பாகிஸ்தான் பத்திரிக்கையான டான் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இது சுத்தப் பொய், விஷமத்தனமானது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அரசு தரப்பிலிருந்து இதுபோல் எந்த ஆவணமும் தரப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இது முற்றிலும் கற்பனையானது. இதுபோல எந்த ஆவணமும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து நமக்கு வழங்கப்படவில்லை.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி மட்டுமே ஒரு ஆவணத்தை பாகிஸ்தான் தந்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த சம்பவங்களுக்கும், இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications