இங்கிலாந்து: கர்ப்பிணி கொடூரக் கொலை-வயிற்றைக் கிழித்து குழந்தை திருட்டு

இங்கிலாந்தின் ஒர்சஸ்டர் பகுதியைச் சேர்ந்வதர் டார்லின் ஹேயன்ஸ். 23 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஹேயன்ஸ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் கிடந்ததைப் பார்த்தனர்.
அவரது வயிறு மிக மோசமான முறையில் கிழிக்கப்பட்டிருந்தது. அவரது உடலை போர்வையில் வைத்து சுற்றி வீட்டில் இருந்த ஒரு கப் போர்டுக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளனர் கொலையாளிகள்.
ஹேய்ன்ஸின் வயிற்றில் இருந்த குழந்தையைக் காணாததால் போலீஸார் அதைத் தேடி வந்தனர். எட்டு மாதமான அந்தக் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஹேய்ன்ஸின் குழந்தையை அவரது தோழியான 35 வயதாகும் ஜூலி கோரி என்பவர் வைத்திருந்தபோது அவரைப் போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில், இந்தக் குழந்தை தனக்கு பிறந்ததாக கூறியுள்ளார். ஆனால் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது அது ஹேய்ன்ஸின் குழந்தைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஹேய்ன்ஸ் இறந்தவுடன் அவரது குழந்தையுடன் ஜூலி, நியூ ஹாம்ப்ஷயருக்கு தனது காதலனுடன் இடம் பெயர்ந்து விட்டார். இந் நிலையில் பிளைமவுத் நகரில் குழந்தையுடன் போய்க் கொண்டிருந்தபோது போலீஸ் வசம் சிக்கினார்.
குழந்தை நல்ல நலத்துடன் உள்ளது. தற்போது குழந்தையை போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஜூலி கோரியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்தான் ஹேய்ன்ஸைக் கொன்று குழந்தையைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ஹேய்ன்ஸுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளன. அவற்றில் முதல் இரண்டு குழந்தைகளை அவர் தனது தாயாரிடம் கொடுத்து வளர்த்து வந்தார். 3வது குழந்தை அவருடன்தான் இருந்து வந்தது. ஆனால் கர்ப்பிணியாக இருந்ததால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியாமல் அதையும் பாட்டி வீட்டில் விட்டு விட்டார்.
ஹேய்ன்ஸின் கணவர் ரொபர்டோ ரோட்ரிக்ஸ். இவருக்கும், ஹேய்ன்ஸுக்கும் சமீப காலமாக கடும் சண்டை நடந்து வந்தது. இதனால் ரோட்ரிக்ஸை விட்டு ஹேய்ன்ஸ் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
எனவே ரோட்ரிக்ஸையும் போலீஸார் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications