மியான்மர் ஜனநாயக தலைவி ஆங் சான் மீதான தீர்ப்பு ஆக. 11க்கு ஒத்திவைப்பு
யாங்கோன்: மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவி ஆங் சான் சூகியி மீதான ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் முடிவில் ஆங் சானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆங் சான் சூகியி வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஆங் சான் சூகியியின் வீடு உள்ள பகுதிக்கு அருகே உள்ள ஏரியில் நீந்திச் சென்று ஆங் சான் சூகியி வீட்டுக்குள் சென்று சந்தித்தார். இதையடுத்து ஆங் சான் மீது வீட்டுக் காவல் விதிமுறைகளை மீறி விட்டதாக வழக்கு தொடர்ந்தது மியான்மர் ராணுவ அரசு.
யாங்கோனில் உள்ள இன்செய்ன் சிறைச்சாலைக்குள் ஆங் சான் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்குக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ராணுவ ஆட்சியின் இந்த கண் துடைப்பு வழக்கு உடனடியாக ரத்து செய்யப்பட்டு உடனடியாக ஆங் சான் விடுதலை செய்யப்படவேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. ஆனால் அதை மியான்மர் ராணுவ அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கபப்ட்டு விட்டது. வழக்கை மீண்டும் மறு பரிசீலனை செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.
ஆங் சான் சூகியி கடந்த 20 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங் சான் தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி 1990ல் நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதை ஏற்காத தேர்தலை ரத்து செய்து ஆங் சானை வீட்டுக் காவலில் வைத்து விட்டது.