இரட்டை ஆயுளை எதிர்த்து எஸ்ஏ ராஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்ஏ ராஜா சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா அவரது நண்பர் ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் ஆலங்குளம் அருகே வாக்கிங் சென்றபோது கடந்த 31-12-2004 சரமாரியாக வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்ஏ ராஜா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் கூலிப்படை தலைவர்களான பென்னி, பாஸ்கர் ஆகிய 2 பேர் போலீசார் பிடித்ததும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பிரபல கூலிப்படை கொலையாளி டாக் ரவி பிடிபடாமல் தலைமறைவாக இருந்தான். மற்ற 9 பேர் மீது நெல்லை கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் கடந்த 17-4-2008 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அழகர், பாலா ஆகியோர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அது போல எஸ்ஏ ராஜா உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பிலும் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் பானுமதி, மாலா ஆகியோர் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார்கள். இதில் விடுதலை செய்யப்பட்ட எஸ்ஏ ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட வேல்துரை விடுதலை செய்யப்பட்டார்.
கீழ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகர் ஆகியோருக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கீழ்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்ட கண்ணன், அர்ச்சுணன், பரமசிவன் ஆகியோரின் விடுதலையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டதும் எஸ்ஏ ராஜா மற்றும் அவரது மகன்கள் கதறி அழுதனர்.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்ஏ ராஜா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை வக்கீல்கள் துரைசாமி, சரவணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications