ஒகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் எதியூரப்பா
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கர்நாடக முதல்வர் எதியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டுமானால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு நிறுத்த வேண்டும், ஒகேனக்கல் யாருக்கு சொந்தம் என்பது குறித்து சர்வே நடத்த வேண்டும் என்று கன்னட அமைப்புகள் நிபந்தனை விதித்துள்ளன.
இந் நிலையில் டெல்லி சென்ற எதியூரப்பா இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தினார். மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை சந்தித்துப் பேசிய அவர்,
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்குமாறும் இத்திட்டத்தை அமலாக்கும் பணிகளை நிறுத்துமாறு தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தீரும் வரை இந்தத் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும் காவிரிப் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையேயான கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்றும் கோரினார்.
இது தொடர்பாக பன்சாலிடம் அவர் அளித்த மனுவில்,
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காவிரி நதி நீர் நடுவர் மன்றத்தின் முன் வைக்கப்படவில்லை.
இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதிநீர் எல்லை குறித்து தீர்மானிக்க கூட்டு சர்வே நடத்தலாமா என்பது பற்றி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் உள்ளது. மேலும், எங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மின்சார கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக காவிரி நதிநீர் நடுவர் மன்றம் இன்னும் இறுதி தீர்ப்பை வழங்கவில்லை.
எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கும் முன்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண வேண்டும். அதுவரை ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.