பணவீக்கம் மேலும் குறைந்தது!
டெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட பணவீக்கம் என்ற பொருளாதாரப் பதமே அர்த்தமிழந்து வருகிறது. அதைக் கணக்கிடுகிற முறை, முக்கியத்துவம் எதுவுமே அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை.
ஒரு பக்கம் உணவு தானியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய காய்கறிகள் - பழங்கள் போன்றவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், பணவீக்கம் என்ற விஷயமே நாட்டில் இல்லை என்று அரசு வாரம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த வார பணவீக்க அறிக்கையின்படி, நாட்டில் மைனஸ் 1.74 சதவிகிதமாக உள்ளது பணவீக்கம்.
பணவீக்கத்துக்கு புதிது புதிதாக விளக்கம் கற்பிக்கும் பண்டிதர்களின் கருத்துப்படி, போன ஆண்டைவிட இந்த ஆண்டு விலை குறைந்திருக்கிறது என்று பொருள்.
நடைமுறை நிலவரம் என்ன என்பதை மக்கள் நன்குணர்வார்கள்.
இந்த வாரம் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள கணக்கின்படி, அனைத்து உணவு தானியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயின் விலையும் உயர்ந்துள்ளது. பீர், மது வகைகளின் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஜவுளித்துறைப் பொருட்களின் விலை 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எலெக்ட்ரானிக் பொருட்களின் விலை 22 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. பால் பொருட்களின் விலை 4.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஆனால்-
பணவீக்கம் மட்டும் -1.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாம். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச பணவீக்கமாம் இது.
கடந்த ஆண்டு இதே நாளில் பணவீக்கம் 12 சதவிகிதத்தை தாண்டியிருந்தது. ஆனாரல் இப்போதுள்ளதைக் காட்டிலும் அன்றைக்கு விலைகள் குறைவாகவே இருந்தன!
சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு:
இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டன. சமீப நாட்களில் சென்செக்ஸில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுவாகும்.
குறிப்பாக வர்த்தகத்தின் இறுதி நேரத்தில் இன்றைய நாளின் மிக அதிகபட்ச அளவான 15,530 புள்ளிகள் வரை போனது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 154 புள்ளிகள் உயர்ந்து 4612 புள்ளிகள் வரை போனது. சர்வதேச பொருளாதாரம் மீட்சிக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மாறாது என்ற அறிவிப்பு காரணமாகவே இந்த பாஸிடிவ் போக்கு என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இன்றைய நாளில் நஷ்டம் சந்தித்த பங்குகள் மிகச் சில மட்டுமே. டிஎல்எப், மாருதி சுசுகி, ஐசிஐசிஐ போன்றவை நல்ல லாபத்தில் கைமாறி.