கோட்டையில் கொள்ளைக் கூட்டம்-அதிமுக
கடலூர்: இன்று சமூக அக்கறையற்ற கொள்ளைக் கூட்டம் தான் கோட்டையில் அமர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களும் சமூக விரோதிகளையும் கொண்ட கூட்டமாக திமுக ஆட்சி உள்ளது என்று அதிமுக இளம் பெண்கள், இளைஞர் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வெங்கடேஷ் கடும் தாக்குதல் தொடுத்துள்ளார்.
இவர் சசிகலாவின் அண்ணன் மகன் ஆவார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த இளம்பெண்கள், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
அரசியலில் நாம் பங்கேற்க மறுப்பதின் தண்டனை, தகுதி அற்றவர்கள் நம்மை ஆளும் நிலைக்கு தள்ளும் என கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ கூறினார். அவர் சொன்னது அப்படியே இன்று தமிழகத்திற்கு பொருந்தியுள்ளது.
இன்று தமிழகத்தில் நடக்கும் கொள்ளையர்களின் ஆட்சியை மோதி முறியடிக்கும் புதிய திருப்பு முனையாக உருவானது தான் இளம்பெண், இளைஞர் பாசறை.
இளைஞர்கள் வாழ்கையில் என்றும் நல்ல புத்தகங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண், இளைஞர் பாசறைக்கு ஜெயலலிதா 10 கட்டளைகளை அறிவித்துள்ளார்.
கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய உயர்வை ஜெயலலிதா நிச்சயம் தருவார். விசுவாசத்துடன் உழைக்க கூடியவர்களை சமூகத்தில் எந்த நிலையிலும், பொருளாதாரத்தில் கடைகோடியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய உயர்வை அளிப்பவர் ஜெயலலிதா தான்.
இன்று சமூக அக்கறையற்ற கொள்ளைக் கூட்டம் தான் கோட்டையில் அமர்ந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களும் சமூக விரோதிகளையும் கொண்ட கூட்டமாக திமுக ஆட்சி உள்ளது. இது போன்ற அரசியல் போலிகளை விரட்டியடிக்கும் கூட்டமாக பாசறை செயல்படவேண்டும்.
இன்றைய ஆட்சியால் யாருக்கும் எந்த பலனும் இல்லை . மணல், அரிசி, உரம் கடத்தல் என நாட்டை சுரண்டி வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை கொள்ளையடிக்கும் கருவியாக ஆட்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சியால் முதல்வரின் குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். இந்த ஆட்சியை தூக்கியெறிய வேண்டிய கடமை நமக்கும் உள்ளது. இந்த செயலை பாசறை செய்து முடிக்கும் என்றார்.