இந்தியா-ஈரான்-பாக் காஸ் குழாய் திட்டம்: இந்தியா விலகல்?
டெஹ்ரான்: ஈரான் மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுத்துவதாக இருந்த காஸ் குழாய் இணைப்புத் திட்டத்திலிருந்து இந்தியா விலகியுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரியை மேற்கோள் காட்டி ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இதை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் முகம்மது பக்ஸ் அப்பாசி கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் - ஈரான் எரிவாயுத் திட்டத்திலிருந்து இந்தியா விலகியுள்ளது.
ஈரானிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது என்றார்.
இருப்பினும் இந்தியாவின் விலகலை ஈரான் தரப்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு மே மாதம் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்கு எரிவாயு சப்ளை தொடர்பான 7.5 பி்ல்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டன என்பது நினைவிருக்கலாம்.
இந்தத் திட்டத்தின்படி தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 30 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை ஈரான், பாகிஸ்தானுக்கு அளிக்கும். அதன் பின்னர் இது 60 மில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கப்படும்.
இந்தியா, பாகிஸ்தான், ஈரான் எரிவாயுத் திட்டம் 90களில் உருவாக்கப்பட்டதாகும். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை இந்தியாதான் பரிந்துரைத்தது. மேலும் இப்பிராந்தியத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையிலும் இந்தத் திட்டத்தை இந்தியா தெரிவித்தது.
இருப்பினும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதட்டம் அதிகரிக்கவே இந்தத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை இந்தியா நிறுத்தி விட்டது. ஈரான் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பலமுறை கோரியும் அதை இந்தியா ஏற்கவில்லை.
இந்த மூன்று நாடுகளிலும் 2775 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய்களைப் பதித்து அதன் மூலம் ஈரானிலிருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு காஸ் சப்ளை செய்வது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்தத் திட்டத்தால் இந்தியாவுக்குத்தான் அதிக லாபம் கிடைத்திருக்கும். அதேபோல 3000 மெகாவாட்டுகளுக்கும் மேலான மின்சாரப் பற்றாக்குறை கொண்ட பாகிஸ்தானுக்கும் இத்திட்டத்தால் பலன் கிடைத்திருக்கும். ஈரான் கொடுக்கும் காஸ் மூலம் பாகிஸ்தான் 4600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் பாகிஸ்தான் அரசு இந்தத் திட்டத்தில் இணையக் கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்தது என்பது தனிக் கதையாகும்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது காஸ் திட்டத்திலிருந்து இந்தியா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.