காவல் நிலையத்தில் கைதியை மீட்க முயன்ற கம்யூ கட்சியினர்
தென்காசி: தென்காசி போக்குவரத்து ஆய்வாளருடன் வாக்குவாதம் செய்து, காவல் நிலைத்திற்குள் புகுந்து கைதியை மீட்க முயற்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி வடக்கு மாசி வீதியில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் காந்தி சிலை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இருவர் புத்தக கடை போட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் ஜான்சன் கடையை ஓரமாக போடுமாறு கூறியுள்ளார்.
அப்போது சிஐடியு மாவட்ட இணை செயலாளர் வேல்முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இன்ஸ்பெக்டரிடம் எங்களது தோழர் கடையை எப்படி நீங்கள் இடமாற்றம் செய்ய சொல்லலாம், என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.
அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா பாண்டியன், ஏட்டு சுப்பிரமணியம் ஆகியோர் சமரசம் செய்தனர்.
அப்போது திடீரென போலீசாரை பார்த்து வேல்முருகனும், மணிகண்டனும் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினராம்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் வேல்முருகனையும், மணிகண்டனையும் பிடிக்க முயலவே அவர்கள் தப்பியோடினர்.
இதில் மணிகண்டனை போலீசார் விரட்டிப் பிடித்தனர். வேல்முருகன் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜான்சன் தென்காசி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் தப்பியோடிய வேல்முருகன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வேல்மயில், பட்டாப்பத்து முருகையா, சிபிஎம் தாலுகா செயலாளர் பால்ராஜ் ஆகிய 5 பேரும் நேற்று இரவு 11 மணி அளவில் தென்காசி காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வியை மிரட்டி போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கைதி மணிகண்டனை மீ்ட்டுள்ளார்.
அவர்கள் வெளியே வரும்போது இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியை முடித்து விட்டு காவல் நிலையம் திரும்பினர்.
அவர்கள் கைதியை மீட்டனர். அப்போதும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் நயினார் வழக்கு பதிவு செய்தார்.
ஆறு பேரும் இன்று பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.