புதுச்சேரி ராஜ்யசபா சீட்-தேர்தல் மன்னன் மனு தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் அவர் வாஜ்பாய், நரசி்ம்மராவ், மன்மோகன் சிங், அப்துல் கலாம், பிரதிபா பாட்டீல் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளார்.
இதுவரை 103 முறை தேர்தலில் போட்டியிட்டு லிம்கா மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் புதுச்சேரி சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான சிவப்பிரகாசத்தை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பொதுவாக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவரின் விண்ணப்பத்தை மூன்று எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ஆனால், இவருக்கு யாரும் முன்மொழியவில்லை. மேலும், அவர் டெபாசிட் தொகையான ரூ. 5 ஆயிரத்தையும் கட்டவில்லை.
இதையடுத்து அவரது வேட்புமனு பரிசீலனையின் போது நிராகரிக்கப்படும் என தெரிகிறது. தேர்தலில் போட்டியிட பத்மராஜன் மனு தாக்கல் செய்வது இது 104வது முறை யாகும்.