கேரளா-புதிய அணைக்கு தடை கோரும் ராமதாஸ்
சென்னை: முல்லைபெரியாறு பகுதியில் கேரள அரசுக்கு புதிய அணை கட்ட வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மாநில சுயாட்சிக்கு ஆதரவாகவும், தமிழ் மொழிக்கு மத்தியில் உரிய இடம் கொடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி குரல் கொடுத்த மறுநாளே, அவரது குரலை நசுக்கிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைபெரியாறு பகுதியில் இருக்கும் பழைய அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கான நிலஅளவு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் கேரள அரசுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த அறிவுரையை ஏற்று முல்லை பெரியாறு அணையை தமிழக அரசு பழுது பார்த்து வருகிறது.
அணையை வலுப்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் திருப்திகரமாக நடைபெற்றிருக்கிறது என்ற அடிப்படையில்தான், அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.
வீண்புரளியை கிளப்பும் கேரளா...
ஆனால், நீர்மட்டத்தை இப்படி உயர்த்தினால் அணை இடிந்துவிடும் என்றும், அதனால் பெரும் மனிதப் பேரழிவு ஏற்படும் என்றும் கேரள மாநில அரசு தொடர்ந்து வீண்புரளியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் இத்தகைய வீண் புரளியை கிளப்பி வருவதற்கு அதன் சுயநலனும், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டதால் வெற்றிடமாகப் போய்விட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டுக் கொண்டுள்ள தோட்ட அதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகர்கள் ஆகியோரின் நலனை காக்கவேண்டும் என்ற துடிப்பும்தான் காரணம்.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகமும் துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதிர்ச்சி அளிக்கிறது...
புதிய அணை கட்டவேண்டும் எங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கேரள அரசு மிகுந்த குதூகலத்துடன் அறிவித்திருக்கிறது. கேரளாவிற்கு மகிழ்ச்சியளிக்கும் இந்த நடவடிக்கை, தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
முல்லை பெரியாறு பிரச்சனை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருந்துவரும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எப்படி இத்தகைய அனுமதியை வழங்கியிருக்கிறது? எந்த அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்விகளை உடனடியாக எழுப்ப வேண்டும்.
மத்திய அரசுக்கு தனது எதிர்ப்புகளை தமிழகம் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தின் நலனை காக்க உறுதியான நடவடிக்கைகளை மாநில அரசும், முதல்வரும் மேற்கொள்ளவேண்டும்.
உறவுக்குக் கைகொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பது வெற்று முழக்கமாக இல்லாமல் செயல்வடிவம் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
அரசியல் ரீதியான நடவடிக்கைகளுடன் நமது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.
உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி புதிய அணைக்கான அனுமதிக்கு தடை ஆணை பெற்று முல்லை பெரியாறு அணையையும், அதில் நமக்குள்ள உரிமையையும் நிலைநிறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.