30,000 பேரிடம் ரூ. 420 கோடி சுருட்டல்!
சென்னை: மும்பையை சேர்ந்த சிட்டி லிமோசின்ஸ் என்ற நிதி நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த சுமார் 30,000 பேரிடம் சுமார் ரூ. 420 கோடி அளவுக்கு பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
எத்தனை முறை பட்டாலும் நமது மக்கள் புத்தி வராது என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் தான் இந்த சிட்டி லிமோசின்ஸ் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் சென்னை கிளையில் பண மோசடி நடந்ததாக கூறி கடந்த 4 நாட்களாக மக்கள் புகார் கொடுக்க அலைமோதுகின்றனர். நேற்று முன்தினம் வரை சுமார் 2,000 பேர் புகார் கொடுத்திருந்தனர்.
நேற்றும் இதேபோல் போலீஸாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,000 புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீஸார் இன்றும் புகார்கள் வருமோ என அச்சத்தில் இருக்கின்றனர்.
இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. எங்களது ஆரம்ப கட்ட விசாரணையில் சுமார் 30,000 மக்கள் வரை பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது 420 பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல் மசூத் என்பவரை தேடி வருகிறோம்.
அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தினால் மாசம் ரூ. 7 ஆயிரத்து 775 கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதையடுத்து பலரும் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
அந்த நிறுவனமும் துவக்கத்தில் ஒரிரு மாதங்களுக்கு சரியாக பணம் கொடுத்து வந்துள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவனம் கொடுத்த காசோலைகள் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டன.
பணம் போட்டவர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது நிர்வாகத்தினர் பல கதைகளை கூறி அவர்களை சமாளித்தனர். இந்நிலையில் 4 தினங்களுக்கு முன் அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.
இதையடுத்து மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்படும்.
போலியான லைசென்ஸ்...
மேலும், அந்த நிறுவனத்துக்கு 2006 வரை தான் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. அதன் பின்னர் அவர்கள் போலியான லைசென்ஸ் தயாரித்து, மக்களை மூன்று ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர் என்றார்.
தமிழகத்தில் நிதி நிறுவனங்களில் மக்கள் பணத்தை போட்டு ஏமாறுவது இது எத்தனையாவது முறை என்று எண்ணுவது மிகவும் கடினம். இந்த வழக்கை சேர்க்காமல் இது போல் தமிழகத்தில் நடந்த ஆறு பெரிய நிதிநிறுவன மோசடி வழக்குகளில் மட்டும் சுமார் 6.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் ரூ. 1,168 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு நிறுவனமும் சிக்கியது...
இது சென்னை அண்ணாசாலையில் இயங்கி வந்த கன்ட்ரி வெக்கேஷன்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாகும்.
இவர்கள் மக்களுக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு காத்திருக்கிறது, வந்து வாங்கி செல்லுங்கள் என பேச்சை ஆரம்பிப்பார்கள். இவர்களது பரிசுக்கு ஆசைப்பட்டு செல்பவர்களை 'ஒசி' விமான பயணம், அதிக விலை மதிப்பிலான நிலங்களை குறைந்த விலையில் பெறலாம் என மூளைச் சலவை செய்துள்ளனர்.
பின்னர் பெங்களூர், கொடைக்கானல், காளஹஸ்தி என பல முக்கிய நகரங்களில் நிலம் வாங்கித் தருவதாக உறுதியளித்து, பணத்தை கறந்துள்ளனர். ஆனால், அவர்கள் சொன்னபடி நிலம் வாங்கி தரவில்லை.
இதையடுத்து இவர்களிடம் பணம் கொடுத்த சுமார் 50 பேர் இன்று எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த நிறுவனத்தில் மொத்தம் 10,000 பேர் பணம் கட்டியிருப்பார்கள் எனத் தெரிகிறது. மேலும், இவர்களுக்கு புதுச்சேரி, திருச்சி ஆகிய பகுதிகளிலும் கிளைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு எத்தனை பேர் ஏமாந்தார்களோ..