குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டி... வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அண்டை மாநிலங்கள் பறிக்கவும், இதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்குத் தீங்கும் இடரும் ஏற்படவும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழிவகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழகத்துக்கு ஒப்பந்தம் உரிமை பாதுகாப்பாக இருக்கும் நிலையில், அந்தப் பாதுகாப்பு அரணை உடைக்கும் நோக்கத்துடன், புதிய அணைகட்டக் கேரள அரசு தீர்மானித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்திவிட்டு, தான்தோன்றித்தனமான போக்கில் செயல்பட்டு வருகிறது.
இதனால், தென் தமிழ்நாட்டு விவசாயிகள் பாசன உரிமையை இழக்க நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்னர், கேரளத்தின் முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்குத் தொழில் நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கிவிட்டது என்றும், இனி எந்தத் தடங்கலும் இல்லை என்றும் கூறி, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும் தமிழக அரசு கடமையைச் செய்யாமல், மத்திய அரசின் துரோகத்தை வேடிக்கை பார்க்கிறது.
புதிய அணை கட்டுவதற்கு, ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை, மத்திய அரசு வழங்கியுள்ள உண்மையைக்கூட மூடி மறைக்கத் தமிழக முதல்வர் முற்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது.
தமிழக விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய அரசு துரோகம் இழைப்பதைக் கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து, தாக்குதல்கள் நடத்துவதைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செப்டம்பர் 30ம் நாள், காலை 11 மணி அளவில், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், மறுமலர்ச்சி திமுக சார்பில், என் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications