சனிப் பெயர்ச்சி-திருநள்ளாறுக்கு சிறப்பு பஸ்கள்
காரைக்கால்: சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் 26ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
வரும் 26ம் தேதி மதியம் சுமார் 3.27 மணிக்கு சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம்பெயர்கிறார். இதையடுத்து பிரசித்தி பெற்ற புதுச்சேரி, திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
அன்றைய தினத்தில் இங்கிருக்கும் சனீஸ்வர பகவானை தரிசித்தால் சிக்கல் தீரும் என்பதால் தமிழகம் மற்றம் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இங்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து கும்பகோணம் போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், பொறையார், கடலூர், புதுச்சேரி, பட்டுக்கோட்டை, நன்னிலம், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, பேரளம், காரைக்கால், திருச்சி, கோவை, ஈரோடு ஆகிய ஊர்களிலிருந்து திருநள்ளாறுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.