சோனியா படம், பஸ்களை எரித்து ஜெகன் ஆதரவாளர்கள் போராட்டம்
ஹைதராபாத்: ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் பதவியில் அமர்த்தக் கூடாது என்று கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பியைக் கண்டித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பஸ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
ஆந்திர முதல்வர் பதவியை அடைவது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான இழுபறி நீரு பூத்த நெருப்பாக உள்ளது.
இந்த நிலையில், அமலாபுரம் காங்கிரஸ் எம்.பி. ஹர்ஷ குமார், ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவதற்காக நடந்து வரும் முயற்சிகளை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதையடுத்து ஜெகன் யுவ சேனா என்ற பெயரில் சிலர் ராஜமுந்திரியில் இரு அரசு பஸ்களை தீவைத்துக் கொளுத்தினர்.
இதையடுத்து ஜெகன் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும், பொறுமையுடன் இருக்க வேண்டும் என மறைந்த ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், ராஜ்யசபா எம்.பியுமான கே.வி.பி.ராமச்சந்திர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சோனியா பேனர் கிழிப்பு..
இதற்கிடையே, கம்மம் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்திய ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் சோனியா காந்தியின் பேனரை கிழித்து எறிந்தனர்.
இதற்கு கம்மம் மாட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியும் கண்டித்துள்ளார். இது சாதாரண விஷயமல்ல, இதை கட்சித் தலைமை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றார்.
ஆந்திர முதல்வர் ரோசய்யாவும் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸாராக இருந்தால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications