போலீசாருடன் மோதல்-பிரகாஷ் காரத் ஆலோசனை
சென்னை: தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டத்தின் போது போலீசாருடன் நடந்த மோதல் குறித்து தனது கட்சியி்ன் மூத்த தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆலோசனை நடத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம் வட சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.
இதில் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், மூத்த தலைவர்களான டபிள்யூ.ஆர்.வரதராஜன், சங்கரய்யா, ஜி.ராமகிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன், வாசுகி, எம்எல்ஏக்கள் நன்மாறன், பாலபாரதி, மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள உணவு பாதுகாப்பு மாநாடு குறித்தும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணி தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகம் முழுவதும் கோவில் நுழைவுப் போராட்டங்களன்போது போலீசாருடன் சிபிஎம் தொண்டர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய காரத், இந்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி, போபர்ஸ் ஊழல் முக்கியக் குற்றவாளியான குவோத்ரோச்சி மீதான வழக்குகளை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறது. அதன் இறுதி கட்டத்தைத் தான் நாம் இப்போது எட்டியிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு பங்கு இருப்பதால் அவர்கள் வழக்குகளை முடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்.