மதுக் கடையில் புகுந்து விடிய விடிய குடித்த திருடர்கள் - காலையில் பாட்டில்களோடு எஸ்கேப்!
நாகர்கோவில்: நாகர்கோவில் டாஸ்மாக் கடையை பிரித்து திருட வந்த ஆசாமிகள் விடிய விடிய மது குடித்து கும்மாளம் அடித்துள்ளனர். காலையில், கடைக்குள் இருந்த மதுபாட்டில்களை அள்ளிக் கொண்டு எஸ்கேப் ஆகி விட்டனர்.
நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவில் டாஸ்மாக் 4714 எண் கொண்ட கடை ஓட்டை பிரித்து கொள்ளை நடந்ததாக நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சம்பவ நடந்த டாஸ்மக் கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் கைரேகை பதிவு செய்தனர்.
கடையின் நிலையைப் பார்த்த போலீஸார் அதி்ர்ச்சி அடைந்தனர். கடை முழுவதும் முட்டைகளை வீசியடித்துள்ளனர். மதுபாட்டில்கள் ஆங்கங்கே சிதறிக் கிடப்பதும், சிப்ஸ் உள்ளிட்ட சைட் டிஷ்கள் சரமாரியாக விசிறியடிக்கப்பட்டிருந்தன.
கடையின் ஓட்டு கூரையை பிரித்து இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு உள்ளே புகுந்துள்ளனர். திருட வந்தவர்கள் கண் நிறைய சரக்கைப் பார்த்ததும் உட்கார்ந்து இஷ்டத்திற்கு குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
போதை ஏற, ஏற பாரில் இருந்த கடலை, முட்டை போன்றவற்றை எடுத்து சாப்பிட்டுள்ளனர். அப்படியே தூக்கியும் எறிந்துள்ளனர். ஆம்லெட் போடுவதற்காக வைத்திருந்த பச்சை மூட்டைகளை கடையின் நாலாபுறமும் வீசி எறிந்து சிதறடித்துள்ளனர்.
இத்தனைக்கும் 3 குவார்ட்டர் பாட்டில்களை மட்டுமே அவர்கள் விடிய விடிய உட்கார்ந்து குடித்துள்ளனர். கடையின் உள்ளே மூன்று குவாட்டர் பாட்டில்கள் குடித்து முடிக்கப்பட்டு காலியாக்கப்பட்ட நிலையி்ல் இருந்தது.
போதை வேகத்தில் கூத்தடித்த அவர்கள் அதிகாலை நேரம் கடையில் இருந்த 59 குவாட்டர் பாட்டில்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் இரவு விற்பனையில் வசூலான ரூ.25 ஆயிரம் ரூபாய் மேஜை டிராயரில் இருந்தது. ஆனால் குடிகார திருடர்கள் கண்ணில் படவில்லை. அது அப்படியே இருந்தது.
கடையில் குடித்து கும்மாளமிட்டு ஆசாமிகள் அதை திருடவோ, எடுக்க முயற்சி செய்யவோ இல்லை. இதிலிருந்து அவர்களது முழு நோக்கமும் போதை ஏற்றி கும்மாளம் அடிப்பதிலேயே இருந்துள்ளது.
டாஸ்மாக் கடையை விடிய விடிய பார் ஆக்கி கும்மாளம் அடித்த திருடர்கள் குறித்து நாகர்கோவில் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.