கோவை குண்டு வெடிப்பு கைதிகள் இருவர் விடுதலை
கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த 1998ம் வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி அன்று தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
இந்த வெடு குண்டு சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அல்-உம்மா பாஷா, அன்சாரி உட்பட 167 பேரை கைது செய்தனர்.
வழக்கு விசாரணைக்குப் பின்பு, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உட்பட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தனி நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 18 வயதுக்கு கீழ் இருந்த எங்களை போலீசார் கைது செய்து, குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்து விட்டனர். எனவே, தனி நீதி மன்றம் விதித்த தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, ஆயுள் தண்டனை பெற்ற ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அம்ஜத் அலி ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த வாரம் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவு நேற்று, கோவை மத்திய சிறைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து 11 ஆண்டுக்கு பின்பு , அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications