பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலையீடாதீர்கள்- சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை
டெல்லி: இந்திய - சீன உறவின் நீடிப்பை கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள சீனா முன்வர வேண்டும் என இந்தியா எச்சரிக்கை கலந்த தொணியில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக சீனா கூறியுள்ளது. இதுதொடர்பான செய்தி, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவாவில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் அரசுடன் இணைந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த சீனா விரும்புவதாக அந்த நாட்டு அதிபர் ஹூ ஜின்டாவோ தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 1947ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது பாகிஸ்தான். இது சீனாவுக்கு நன்கு தெரியும். இந்தியாவின் நிலை குறித்தும் அது அறியும். இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் அது தலையிடுவது கவலை தருகிறது.
இந்தியா - சீனா உறவு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற செயல்களில் சீனா ஈடுபடக் கூடாது என்று இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியும், சீன அதிபரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையை சீரமைக்குப் பணியில் பாகிஸ்தானுடன் இணைந்து சீனா செயல்படப் போவதாக ஹூ ஜின்டாவோ தெரிவித்தார்.
மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் மக்கள் எப்போதும் இதயப்பூர்வமாக இணைந்திருப்பவர்கள் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.