நான் விதி மீறவில்ல - அதிகாரிகள் தவறு செய்திருந்தால் நடவடிக்கை: ராஜா
சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் எனக்கு முன்பு இருந்த அமைச்சர்கள் என்ன நடைமுறையைப் பின்பற்றினார்களோ அதையேதான் நானும் பின்பற்றினேன். எந்த விதி மீறலிலும் நான் ஈடுபடவில்லை. ஒரு வேளை கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீறியிருந்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
சென்னை வந்த ராஜா அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
தொலைபேசி சேவைக்கான புதிய உரிமம் மற்றும் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்கிய பரிந்துரையின் அடிப்படையிலும், அதன்பேரில் பிரதமருடன் கலந்து பேசிய ஆலோசனையின் பேரிலுமே புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அப்படி வழங்கப்படும்போது கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளை பொறுத்தவரை, 1994-ம் ஆண்டு முதல், எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த நெறிமுறைகளை பின்பற்றித்தான் உரிமங்களும், அலைவரிசையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு அரசு எடுத்த கொள்கை முடிவுகளுக்கு மாறாக, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள், நிறுவனங்களுக்கு சலுகை அளித்திருந்தால் அது குறித்து விசாரணை நடைபெறும்.
2001-ம் ஆண்டுக்குப் பிறகு உரிமக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அது எனது அதிகார எல்லைக்குட்பட்டது இல்லை. இதற்கான அதிகாரம் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி தலைமையிலான குழுவுக்கே உள்ளது. சமீபத்தில் கூடிய அந்த குழு, 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட உரிம கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்துள்ளது என்றார் ராஜா.