மறுகுடியேற்றம்: கருணாநிதி-இலங்கை அமைச்சர் சந்திப்பு
சென்னை: சென்னை வந்த இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், முதல்வர் கருணாநிதி, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரை சந்தித்து தமிழர் மறு குடியேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இலங்கை அரசின் இளைஞர் நலம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆறுமுக தொண்டமான், முதல்வர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது கனிமொழி எம்.பியும் உடன் இருந்தார்.
இருவருடனும் ஆலோசனை நடத்திய பின்னர் வெளியில் வந்த ஆறுமுகம் தொண்டமான் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், எங்களது அதிபர் முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினை அனுப்பியிருந்தார்கள்.
தற்போது முதல்வர் கருணாநிதியிடம் அங்கே என்னென்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான விவரங்களை கொடுத்திருக்கிறேன்.
தொடர்ந்து முகாம்களிலிருந்து தமிழர்களை அனுப்பி கொண்டு வருகிறோம். குழு வந்த பிறகு 57 ஆயிரம் பேரை அனுப்பியிருக்கிறோம். வருங்காலத்தில் மற்றவர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே குடியேற்றுவோம்.
1.86 லட்சம் பேர்தான் பாக்கி...
இதுவரை ஒட்டு மொத்தமாக 81 ஆயிரம் பேர் தங்கள் இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். இன்னும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் பாக்கியிருக்கிறார்கள். அவர்களையும் விரைவில் அனுப்பி விடுவோம்.
அங்குள்ள பிரச்சினை கண்ணி வெடி பற்றியது தான். நாம் தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடி அமர்த்துவது மட்டுமல்ல. அவர்களுக்கு வேண்டிய வீடு, சாமான்கள் போன்றவற்றையும் கொடுக்கிறோம்.
குடியேற்றப்படுபவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்கள் தொழில் செய்யவோ, விவசாயம் செய்யவோ உதவி செய்கிறோம். அவர்கள் ஏற்கனவே இருந்ததைவிட 2 மடங்கு நிலை சீரடைந்த அளவிலே உள்ளார்கள்.
அதிபர் ராஜபக்சே, முதல்வருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கச் சொன்னார். அங்கே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் தெரிவிக்கச் சொன்னார்.
இந்திய அரசு கண்ணி வெடி அகற்றும் பணிக்கு ஏற்கனவே உதவி செய்திருக்கிறது. இந்தக் குழு வந்த பிறகு இன்னொரு குழுவினை இதற்காகவே அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். தமிழர்களை குடியமர்த்த 2 சான்றிதழ்கள் நாங்கள் பெற்ற பிறகு தான் அவர்களை அங்கே அனுப்பி வைக்கிறோம்.
தற்போது குடி பெயர்ந்துள்ள அனைவருக்கும் அந்தச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மற்றவர்களை பொறுத்து அந்த சான்றிதழ் தற்போது தேவைப்படுகிறது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் எங்களுக்கு அது கவுரவம். அழைப்பு அனுப்புவது இவர்கள் கையில் இருக்கிறது என்றார்.
யார் சொல்கிறார்கள்....?
குடி பெயர்ந்து செல்பவர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்புவதில்லை என்றும், ஒரு முகாமை விட்டு இன்னொரு முகாமுக்குத் தான் அனுப்பி வைக்கிறீர்கள் என்றும் சொல்கிறார்களே என்ற கேள்விக்கு,
யார் சொல்கிறார்கள்?, இங்கே உள்ள சிலர் தான் அப்படி சொல்கிறார்கள். நானும் தமிழன் தான். அந்த இடத்திற்கே சென்று பார்க்கிறேன். இந்தக் குழு வந்த பிறகு 81 ஆயிரம் பேர் தங்கள் வாழ்விடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் நேரிலே பார்க்காமல் புகார் கூறுகிறீர்கள் என்றார் ஆறுமுகம்.
கலைஞர் டிவி வந்தார்களே...
மேலும், வேறு நாட்டு ஊடகங்களை அனுமதிப்பது இல்லையே என்ற கேள்விக்கு, கலைஞர் தொலைக்காட்சி அங்கே வந்தார்களே, அவர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தானே? என்று கேட்டார் ஆறுமுகம் தொண்டமான்.