பெரியாறு அணையில் நீர்க்கசிவே இல்லை-தமிழகம் மறுப்பு
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் புதிதாக நீர்க்கசிவு ஏற்பட்டிருப்பதாக கேரளா கூறுவதில் உண்மை இல்லை. வழக்கமாக இருக்கும் அணைகளில் ஏற்படும் நீர்க்கசிவு அளவை விட மிகக் குறைந்த அளவிலேயே நீர்க்கசிவு காணப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரியாறு அணையில் ஏகப்பட்ட இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. எனவே அணை ஆபத்தாகி விட்டது. பல லட்சம் உயிர்கள் கேள்விக்குறியாகி விட்டது என்று சமீபத்தில் கேரள அரசும், அது நியமித்த நிபுணர் குழுவும் பீதியைக் கிளப்பின.
இதையடுத்து உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று காவிரி டெக்னிகல் செல் பிரிவின் துணைத் தலைவர் சுப்ரமணியன், மதுரை வட்ட பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் பொறியாளர் குழு அணைக்குச் சென்றது.
இந்தக் குழுவில் பெரியாறு அணை உதவி பொறியாளர்கள் நாகஜோதி, தினேஷ் கண்ணன், சந்தனகுமார், தமிழ்செல்வன், கார்த்திகேயன், ஜெகதீஸ், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர்க்கசிவு அளவிடும் காலரி பகுதி ஆகியவற்றை இக்குழு பார்வையிட்டது.
குறிப்பாக நீர்க்கசிவு அதிகம் இருப்பதாக கேரள குழு கூறிய மெயின் அணையில் உள்ள 17, 18 பிளாக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் பொதுப்பணித்துறை பொறியாளர் குழுத் தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், கேரள நிபுணர் குழு கூறுவது போல் அணைப்பகுதியில் எங்கும் நீர்க்கசிவு இல்லை. வழக்கமாக கசிவு நீர் எந்த அளவு வெளியேற வேண்டுமோ அதைவிட குறைவாகத்தான் உள்ளது.
இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.