'ஆப்சென்ட்' அழகிரி-தர்மசங்கடத்தில் மத்திய அரசு!
டெல்லி: மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரியால் நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
அழகிரி, மத்திய அமைச்சரான பிறகு நாடாளுமன்றத்தில், கிட்டத்தட்ட அனைத்து கேள்வி நேரங்களின் போதும், 'ஆப்சென்ட்' ஆகி வருகிறார். கேபினட் அந்தஸ்துள்ள பதவியை போராடிப் பெற்றவர்கள், அமைச்சர் என்ற முறையில் அவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வராமல் இருப்பது எதிர்க்கட்சிகள் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
அழகிரியின் 'ஆப்சென்ட்'டுக்கு காரணம் மொழிப் பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது.
அவையில் கேள்விகளுக்கு தமிழில் பதிலளிக்க அனுமதி தரவேண்டும் என ஏற்கனவே அழகிரி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதும், அது நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று லோக்சபாவில் உரத் தட்டுப்பாடு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர் அழகிரி அவையில் இல்லை.
அத்துறையின் இணையமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளிக்க எழுந்தபோது ஆவேசமான மார்க்சிஸ்ட் எம்பி பாசுதேவ் ஆச்சார்யா, அவைக்கு அமைச்சர் அழகிரி வந்தே தீரவேண்டும் என பிரச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இவரோடு, பாஜகவின் அனந்த்குமார், சமாஜ்வாதி மற்றும் சில எதிர்க்கட்சி எம்.பிக்களும் சேர்ந்துகொண்டனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.
உடனடியாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு சுதாரித்துக்கொண்டு, அழகிரிக்காக பேசினார். எதிர்க்கட்சியினரின் போக்கை அவர் கடுமையாக சாடினார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் ராசாவும் குரல் கொடுத்தார்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்களும் எதிர்க்கட்சியினரைக் கண்டித்துப் பேசினர். இதனால் பெரும் அமளியாக இருந்தது.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் அழகிரிக்கு ஆதரவாக பேசியதை கண்டித்த சிபிஎம் எம்.பிக்கள், சிபிஎம் உறுப்பினர் எழுப்பிய கேள்வி என்ற ஒரே காரணத்திற்காக அழகிரியை திரிணமூல் உறுப்பினர்கள் ஆதரிப்பதாக குற்றம் சாட்டினர்.
மேலும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரான ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியும் அடிக்கடி சபைக்கு வராமல் மட்டம் போடுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதால் சலசலப்பு அதிகரித்தது.
நிலைமை மோசமானதை உணர்ந்த சபாநாயகர் மீரா குமார், 'இது கேபினட் சம்பந்தப்பட்ட விஷயம். அமைச்சர் இல்லாத போது இணையமைச்சர் பதில் அளிக்க அனுமதிப்பது தான் மரபு' என்று அழகிரியைக் 'காப்பாற்றி' எதிர்க் கட்சியினரை அமரவைத்தார்.
இப்போது சமாளித்து விட்டாலும், அடுத்து வரப்போகிற கூட்டத் தொடர்களில் இப்பிரச்சனையை எப்படி சமாளிப்பது என காங்கிரஸ் தரப்பு யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.
திருச்செந்தூர் தேர்தல் பணியில் அழகிரி தீவிரம்:
இந் நிலையில் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார்.
திமுக தென் மண்டல செயலாளரான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்செந்தூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு பாடுபடும் வகையில் தேர்தல் பணியாற்றுவது சம்பந்தமாக தென்மண்டல மாவட்ட திமுக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 28ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் சித்ராபார்க்கில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications