மிரட்டி பணம் பறிக்கும் மாவோயிஸ்டுகளின் ஆண்டு வசூல் ரூ.2,000 கோடி

சட்டீஸ்காரில் கணிம வளம் நிறைந்த பாஸ்டார் பகுதி கடந்த பல நாட்களாக எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், கண்டுகொள்ளப்படாமல் வறுமையின் பிடியில் கிடந்தது.
அடர்ந்த காடுகள் நிறைந்த இப்பகுதியை, இந்தியாவில் தற்போது தடை செய்யப்பட்ட நக்சல் இயக்கமான மாவோயிஸ்டுகள் தங்களின் புகலிடமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் 20 மாநிலங்களுக்கு மேல் இவர்கள் பரவியிருந்தாலும் சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கைவரிசை அதிகளவில் காணப்படும்.
அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் தங்களுக்கென தனி நெட்வொர்க்கை உருவாக்கி ஆயுதங்கள் உட்பட கட்டமைப்பு வசதிகளையும் நிழலுலகில் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான நிதி, பெரும்பாலும் ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றின் மூலமாகவே பெறப்படுகிறது. இவ்வாறு மாவோயிஸ்டுகள் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வசூல் செய்வதாக சட்டீஸ்கர் போலீஸ் டி.ஜி.பி விஷ்வ ராஜன் தெரிவித்துள்ளார்.
இதில் பெரும்பங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசூலாவதாக தெரிகிறது. சமீப காலங்களில் மாவோயிஸ்டுகள் தொடர்பாக போலீசாரிடம் சிக்கிய சில ஆவணங்களின் மூலம் கிடைத்த தகவல் தான் இது. ஆனால், உண்மையான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ராய்ப்பூரில் நிருபர்கள் பேட்டியில் இதுபற்றி அவர் கூறுகையில், 'சட்டீஸ்காரின் பாஸ்டார் பகுதியில் டெண்டு பட்டா எனப்படும் பீடி தொழில் பிரபலம். இத்தொழிலில் ஏராளமான பணம் புரளும். இவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு முக்கிய இலக்காக உள்ளனர். மேலும், அரசு பணிகளை கான்டிராக்ட் எடுப்பவர்கள் சுரங்க முதலாளிகள் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.
வசூலாவதில் 20 சதவீதத்தை அடிமட்டத்தில் இருக்கும் நக்சல்கள் எடுத்துக்கொள்கிறார்கள். மீதி 80 சதவீதம் தலைமைக்கு போகிறது. பாஸ்டார் பகுதியில் அடர்ந்த காடுகள் இருப்பதால் வான்வழியே தாக்குதல் நடத்துவது சிரமம் என்று டி.ஜி.பி கூறினார்.












Click it and Unblock the Notifications