மற்றவர் உயிருடன் விளையாடாதீர்கள்- சொல்கிறார் பொன்சேகா
கொழும்பு: பாதுகாப்பு குறைபாடு காரணமாக என் மீது தாக்குதல் நடந்தால், என்னுடன் வரும் பலபேர் சாகக்கூடும். மற்றவர்களின் உயிருடன் விளையாடுவது நல்லதல்ல என்று இலங்கை ராணுவ முன்னாள் தளபதியும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் எனக்கூறி பல்லாயிரம் உயிர்களை கொன்று புதைத்த இலங்கை ராணுவத்தின் தளபதி பதவியில் இருந்து பொன்சேகா ராஜினாமா செய்ததை அடு்த்து அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டு விட்டன.
இதனால், வருத்தம் அடைந்துள்ள பொன்சேகா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி, முந்தைய பாதுகாப்பு ஏற்பாடுகளை தக்கவைத்துக்கொள்ள நீதிமன்றம் வரை சென்றுள்ளார்.
இதுகுறித்து கொழும்பு நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசு எனது பாதுகாப்புக்காக 600 வீரர்களும், 25 வாகனங்களும் அளித்திருந்தது. ஆனால் இதை அரசு திடீரென குறைத்துள்ளது.
தற்போது 25 வீரர்களும், 3 வாகனங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. இந்த குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களால் எனக்கு பாதுகாப்பு அளிப்பதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
எனக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. ஒருவேளை பாதுகாப்பு குறைபாடு காரணமாக என் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதில் நான் மட்டும் உயிரிழக்கப்போவதில்லை. என்னுடன் வரும் நூற்றுக்கணக்கானோரும் இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இப்படி பிறருடைய உயிருடன் விளையாடுவது நல்லதல்ல. இதனால்தான் எனது பாதுகாப்பு விவகாரத்தை கையில் எடுத்து நீதிமன்ற வாசல்படி மிதித்துள்ளேன் என்றார்.