சுரணை உள்ளவர்களின் ஆலோசனையை ஏற்ற ஜெயலலிதா - அழகிரி தாக்கு
திருச்செந்தூர்: கடந்த முறை இடைத் தேர்தலில் போட்டியிடாத அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுகவில் ஏதோ சுரணை உள்ளவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களது அறிவுரையை ஏற்று இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் மு.க அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் நேற்று திருச்செந்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் பாக்கியம் தேவகிருபையிடம் மத்திய அமைச்சர் மு.க அழகிரி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அழகிரி நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த இடைத் தேர்தல்களை போல இந்த முறையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும். திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
கடந்த முறை இடைத் தேர்தலில் போட்டியிடாத அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுகவில் ஏதோ சுரணை உள்ளவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களது அறிவுரையை ஏற்று இந்த தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மனு தாக்கலை முடித்து விட்டு வெளியே வந்த என்னிடம் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். உங்களை நம்பித்தான் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளேன். அந்த நம்பிக்கையை கூட்டணி கட்சிகளின் துணையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றார் அழகிரி.