கோர்ட்டில் சரணடைந்தால் அன்றைக்கே ஜாமீன்!
சென்னை: குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் சரணடையும் நபருக்கு, அன்றைய தினமே ஜாமீன் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகப்பட்டினம் அருகே செட்டிப்புலம் கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் பிரவேசம் செய்தனர். அப்போது, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 315 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானவர்களில் 10 பேர் தங்களுக்கும், சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வன்கொடுமைச் சட்டத்தில் முன் ஜாமீன் பெற முடியாது என்பதால், தாங்கள் நீதிமன்றத்தில் சரணடையும் தினத்தன்றே ஜாமீன் வழங்க தஞ்சாவூர் முதன்மை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதி, 'சரணடையும் நபர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் செயல்களை பரிசீலித்து, அவர்களை சிறையில் அடைப்பதா இல்லையா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க அதிகாரம் உள்ளது.
அதேபோல், குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் சரணடையும் ஒருவர், தான் இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக வாதிட்டால், அவரை சிறைக்கு அனுப்பாமல் அன்றைய தினமே ஜாமீனில் வெளியிடுவது தொடர்பாகவும் நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.
செட்டிபுலம் வழக்கில், மனுதாரர்கள் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தால் அவர்களை அன்றைய தினமே ஜாமீனில் விடுவிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கலாம்' என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.