ஆவின் முறைகேடு- முகவர்கள் போராட்டம்
சென்னை: ஆவின் நிர்வாக முறைகேடுகளை கண்டித்து வரும் 10ம் தேதி தமிழ்நாடு பால் முகவர் நலச் சங்கத்தினர் கோட்டை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி இதுகுறித்து கூறியதாவது:
ஆவின் நிர்வாகத்தில் பல ஆண்டுகளாக ஊழல் நடைபெற்று வருகிறது. தனியார் பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆவின் அதிகாரிகளும், சில விநியோகஸ்தர்களும் துணை போகின்றனர். இதன் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையில் உள்ள பால் முகவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பால் அட்டைகளை வழங்காமலும், புதுப்பிக்காமலும் ஆவின் நிர்வாகத்தினர் இருந்து வருகின்றனர்.
எனவே ஆவின் மாதாந்திர அட்டைகளை திரும்ப வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அட்டைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டி ருக்கும் பால் விலையை விட லிட்டருக்கு ரூ.1 கூடுதல் விலை நிர்ணயித்தாவது எங்களுக்கு வணிக அட்டைகள் வழங்க வேண்டும்.
பால் முகவர்களுக்கு தனி நலவாரியம் வேண்டும். அத்துடன் குறைந்த வட்டிக்கு எங்களுக்கு கடன் வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டை நோக்கி பேரணி நடக்க இருக்கிறது.
இப்பேரணியின் முடிவில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவினை முதலமைச்சர், துணை முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் கொடுக்க உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications