வீராணம் ஏரி திடீர் திறப்பு: 20 கிராமங்கள் மூழ்கின
காட்டுமன்னார்கோயில் அருகே 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையால் வீராணம் ஏரி நிரம்பிவிட்டது. இதையடுத்து அதிலிருந்து வெள்ளியங்கால் ஓடையில் 2,700 கனஅடி நீர் திடீரென
வெளியேற்றப்பட்டது.
இந்த நீர் காட்டுமன்னார்கோயில் பகுதியில் 50 கிராமங்களில் புகுந்தது. இதனால் வீடுகள் நீரில் மூழ்கிவிட்டதால் மக்கள் ஆடு, மாடுகளுடன் மேடான பகுதியில் தங்கியுள்ளனர்.
மேலும் பல கிராமங்களை நீர் சூழ்ந்துவிட்டதால் அவை துண்டிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த கிராம மக்கள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் பகுதியில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கிவிட்டன.
பாதிக்கப்பட்ட இந்த கிராமங்களில் அரசு உரிய மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடவில்லை என அப் பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீராணம் ஏரியில் வழக்கத்துக்கு மாறாக நீர்மட்டத்தை மிக அதிகமாக உயர்த்தியதால் தான் இந்த அளவுக்கு வெள்ளப் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
வீராணம் ஏரியின் நீர் மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இதன் மொத்த கொள்ளவே 47.50 அடி தான்.
இந்த ஏரியில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் டிசம்பர் மாத இறுதிவரை 43.5 அடி உயரத்துக்கே தண்ணீரைத் தேக்கலாம் என்ற நடைமுறை கடந்த 8 ஆண்டுகளாகக்
கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
அதிகப்படியான நீரைத் தேக்கினால், மழை அதிகரிக்கும்போது நீரை திடீரென அதிகமாக வெளியேற்ற நேரிடும் என்பதால் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த ஆண்டு நடைமுறை மீறப்பட்டு மிக அதிகமான நீர் தேக்கப்பட்டு, திடீரென திறந்துவிடப்பட வேண்டிய நிலை உருவானதால் தான் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏரியின் நீர்மட்டம் 44 அடி உயரத்துக்கு மேல் அதிகரித்தபோதே எதிர்கரையில் உள்ள கருணாகரநல்லூர், அறந்தாங்கி, சித்தமல்லி உள்ளிட்ட 15 கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் நெல், கரும்பு, வாழை, மணிலா பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவி்டடன என்பது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரி நிரம்புகிறது:
இந் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியின் நீர் மட்டம் 35 அடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து லிங்க் கால்வாய் வழியாக 776 கன அடி நீரும், பேபி கால்வாய் வழியாக 50 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு செங்குன்றம், சோழவரம் ஏரிகளுக்கு திருப்பிவிடப்பட்டு வருகிறது.